புதுக் கோலம்

எங்கும் அழகிய மாக் கோலம் - இன்று

குங்குமச் செல்விக்கு மணக் கோலம்

பொங்கும் இசை வெள்ளம் மிதந்து வர

என் கண்மணி கொண்டாள் புதுக் கோலம்



பூக்கள் சூழ பூவை வந்தாள்

இமைக்கும் விழியினில் பாக்கள் தந்தாள்

நாயகன் அருகே வந்தமர்ந்தாள்

நாணத்தில் கண்கள் சிவந்திருந்தாள்



வேதங்கள் காற்றினில் முரசொலிக்க

தேவர்கள் மூவர்கள் வந்து நிற்க

வந்தவர் யாவரும் வாழ்த்துரைக்க

நாயகன் மங்கள நாண் சூட



கண்ணே உன்னைக் காணக் காண

நெஞ்சில் இன்பம் பொங்குதம்மா

பெண்ணே புகுந்த வீட்டில் - நீ

புகழை வளர்க்க வேண்டும்மம்மா



கணவன் செல்லும் வழியினிலே

நீயும் செல்ல வேண்டும்மம்மா

கணவன் வழி நீ நடந்தால்

என்றும் காண்பாய் திருநாளம்மா

வாகை சூடும் நேரமிது

வாகை சூடும் நேரமிது இரு மயில்கள்
தோகை விரித் தாடும் கால மிது
இனிக் கார்க் காலம் தான் - இதயந்தனில்
இனிய போர்க்கோலம் தான்

வானத்து மின்னல் தான் புன்னகையோ - அர்ச்சுனன்
வில் தான் இவள்தன் புருவமோ - கேள்விக் குறிதான்
வஞ்சியின் செவி மடலோ - வண்டு தான் விழியோ
வாழைதான் உடலோ , குயிலோசை தான் குரலோ

நடையினில் தவழ்ந்திடும் சலங்கையொலி
தென்றலில் மிதந்திடும் புன்னகை
யொலி நுழைந்ததே தேவனின் மனதிலே
நங்கையோ இன்ப வெள்ளத்திலே

விழிகளுக்கிடையே மொழிகள் தூது செல்ல
இரு கரம் மெல்ல படர்ந்து கொள்ள
காதல் ஜோடி ஒன்று இன்று , மெல்ல
கவிதைகள் ஆயிரம் படைத்ததம்மா

என்ன செய்யப் போகின்றாய்

ஒவ்வொரு முறை

கண்ணாடியைப் பார்க்கும் போதும்

பெருமிதம் கண்களில்

பெருகி மனம் நிறைகின்றதே


ஒவ்வொரு அவயங்களையும்

கவனமாக அழகுபடுத்துவ தென்ன

கவின்மிகு தோற்றம்

ஏற்றம்பெற மெனக்கெடுவ தென்ன


மனிதநேயம் மறந்த மனிதனே

இவ்வுலக முனக்கு நிரந்தரமோ

விடுமுறைக்குத் திட்டமிடும்நீயே

விடுமுறை முடிந்தபின் செல்லுமிடமேதோ


கண் கொடுத்தான்

விழியிழந்தோர்க்கு விழியாய்ச் செயல்பட

செவி கொடுத்தான்

செவித்திறன் குறையுடையோர்க்குச் சேவைசெய்ய


கைகளைப் படைத்தான்

கரமிழந்தோர்க்கு வலுசேர்க்க உதவியாய்

கால்களைக் கொடுத்தான்

காலாக கால்களற்றவர்க்குச் செயல்பட


ஒற்றைருபாய் சுண்டிவிட்டு

ஓராயிரம் ருபாய்ச் செலவிட்டதாய்த்

தர்மசீலன் பட்டம்தேடி

பகலிலும் நீயிங்கு நடிக்கின்றாயே


படைப்பின் காரணம் அறி

அங்கங்கள் முடங்கும்முன் விழி

இதுவரை என்னசெய்தாய்

இனியென்ன செய்யப் போகின்றாய்


விழி! எழு! செய்!