என் இனிய மனைவிக்கு

நினைத்துத் தான்

பார்க்கின்றேன் என்

வாழ்வில் உந்தன்

இனிய வரவை


நெகிழ்ச்சி யூட்டிய

ஒரு நாளில்

பலர் வாழ்த்த

நின் கரம் பற்றினேன்


அந்நாள் தொட்டு

இந்நாள் வரை

இணைந்து நடத்திய

இல்லறம் இன்பமே


ஏற்றமும் உண்டு

இறக்கமும் உண்டு

ஏறி இறங்காதது

அன்பு மட்டுமே


மழலையர் மடிமீது

களிப்புற விளையாடிட

இம்மகிழ்விற்கு நிகர்

ஈடேது இணையேது


என்னில் உன்னையும்

உன்னில் என்னையும்

கண்ட பின்

களிப்பிங்கே மிகுந்ததே


அயராத உன் அன்பில்

ஆடித்தான் போனேனடி

ஆதரவாய் நீயிருக்க

என்னுலகம் வேறேதடி


தோழியாய் தொடர்ந்தாய்

தாதியாகவும் ஆனாய்

தாயாகவும் பரிமளிக்க

உன்னால் மட்டுமே முடியுமடி


இத்தனையும் இயல்பாய்

இசைத்த உன்னை

நான் இதயத்தின்

உச்சத்தில் வைக்கவா


வாழ்க்கையின் மிச்சத்தில்

உனக்கு சேயாக

நான் மாறி நித்தமும்

சேவகம் புரிந்திடவா


என் இதயங்கவர்ந்த கள்ளி

என் வேண்டுகோளை அள்ளி

என்ன வேண்டுமென சொல்லி

என் கடன் தீர்ப்பாயடி துள்ளி