என்ன செய்யப் போகின்றாய்

ஒவ்வொரு முறை

கண்ணாடியைப் பார்க்கும் போதும்

பெருமிதம் கண்களில்

பெருகி மனம் நிறைகின்றதே


ஒவ்வொரு அவயங்களையும்

கவனமாக அழகுபடுத்துவ தென்ன

கவின்மிகு தோற்றம்

ஏற்றம்பெற மெனக்கெடுவ தென்ன


மனிதநேயம் மறந்த மனிதனே

இவ்வுலக முனக்கு நிரந்தரமோ

விடுமுறைக்குத் திட்டமிடும்நீயே

விடுமுறை முடிந்தபின் செல்லுமிடமேதோ


கண் கொடுத்தான்

விழியிழந்தோர்க்கு விழியாய்ச் செயல்பட

செவி கொடுத்தான்

செவித்திறன் குறையுடையோர்க்குச் சேவைசெய்ய


கைகளைப் படைத்தான்

கரமிழந்தோர்க்கு வலுசேர்க்க உதவியாய்

கால்களைக் கொடுத்தான்

காலாக கால்களற்றவர்க்குச் செயல்பட


ஒற்றைருபாய் சுண்டிவிட்டு

ஓராயிரம் ருபாய்ச் செலவிட்டதாய்த்

தர்மசீலன் பட்டம்தேடி

பகலிலும் நீயிங்கு நடிக்கின்றாயே


படைப்பின் காரணம் அறி

அங்கங்கள் முடங்கும்முன் விழி

இதுவரை என்னசெய்தாய்

இனியென்ன செய்யப் போகின்றாய்


விழி! எழு! செய்!

0 Responses

Post a Comment